தலைமன்னார் நிருபர்:
தமது மீள் குடியமர்வு தொடர்பில் அரச திணைக்கள அதிகாரிகளும் முசலி பிரதேச செயலக அதிகாரிகளும் எவ்வித அக்கறையுமின்றி செயற்பட்டு வருவதாகக் கடந்த 10 தினங்களுக்கு முன் மீள்குடியமர்ந்த முள்ளிக்குளம் மக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனிடம் தெரிவித்துள்ளனர்.
மீள்குடியேறிய மக்களை பார்வையிடுவதற்காக பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை முள்ளிக்குளம் சென்ற போது அம்மக்கள் இவ்வாறு தெரிவித்தனர்.
இது தொடர்பாக அம்மக்கள் பாராளுமன்ற உறுப்பினரிடம் மேலும் தெரிவிக்கையில்…
மன்னார் மாவட்டம் முசலி பிரதேசச் செயலாளர் பிரிவுக்குட்பட்ட முள்ளிக்குளம் கிராம மக்களாகிய நாங்கள் இடம்பெயர்ந்த நிலையில் 5 வருடங்களின் பின் மீண்டும் எமது கிராமத்தை அண்டிய பகுதிகளில் தற்காலிகமாக 15/06/2012 அன்று மீள்குடியேறினோம்.
கடந்த யுத்தத்தின் போது 07/09/2007 அன்று முள்ளிக்குளம் கிராமத்தைச் சேர்ந்த 400 குடும்பங்கள் உட்பட முசலியிலுள்ள அனைத்து கிராம மக்களும் இடம்பெயர்ந்து சென்றனர். பின் யுத்தம் முடிவடைந்த நிலையில் 2009 ஆம் , 2010 ஆம் ஆண்டுகளில் முசலி பிரதேசச் செயலாளர் பிரிவில் அனைத்து மக்களும் மீள குடியேற்றப்பட்டனர். ஆனால் முள்ளிக்குளம் கிராம மக்கள் மீள குடியேற்றப்படவில்லை.
இந்த நிலையில் இந்த மக்கள் மன்னார், பேசாலை, தலைமன்னார், தாழ்வுப்பாடு, கீரி, மடுக்கரை, நானாட்டான், சிலாவத்துறை ஆகிய இடங்களில் உறவினர்களுடைய வீடுகளிலும்வாடகை வீடுகளிலும் கடந்த 5 வருடங்களாக வாழ்ந்து வந்தனர்.
இதன் போது நாங்கள் பல்வேறு பட்ட பிரச்சினைகளக்கும் அழுத்தங்களுக்கும் முகம் கொடுத்து வந்தோம்.
எமது மீள் குடியேற்றம் தொடர்பில் நாங்கள் பல்வேறு வேலைத்திட்டங்களை மேற்கொண்டதோடு, ஆர்ப்பாட்டங்கள், கண்டனப் பேரணிகள் போன்றவற்றையும் மேற்கொண்ட போதும் எது வித பலனும் கிடைக்கவில்லை.
இந்த நிலையில் மன்னார் மறைமாவட்ட ஆயர் வண.இராயப்பு யோசப் இம்மக்களின் மீள் குடியேற்றம் தொடர்பில் உயர் மட்டங்களின் கவனத்திற்கு கொண்டு சென்றார். எமது முயற்சியின் பலனாக கடந்த 15 ஆம் திகதி முதல் முள்ளிக்குளம் கிராமத்தை அண்டிய பகுதிகளில் மீள் குடியேறினோம். கடற்படையினர் சில உதவிகளை வழங்கினர். பின் அரச சார்பற்ற அமைப்புகளும் எமக்கு உதவிகளை வழங்கியது. தற்போது நாங்கள் அடர்ந்த காடுகளுக்குள் மரத்தடியில் தற்காலிக கூடாரங்களை அமைத்து வாழ்ந்து வருகின்றோம்.
எங்களை முசலி பிரதேச செயலாளர் உள்ளிட்ட எந்த அதிகாரிகளும் இது வரை வந்து பார்க்கவில்லை.
எமது பிரச்சினைகளைக் கேட்கவில்லை.
ஆனால், அருகில் உள்ள பல கிராம மக்கள் மீள குடியேற்றம் செய்யப்பட்ட போது முசலி பிரதேசச் செயலாளர் மக்கள் மீள் குடியேற்றம் செய்யப்பட்ட போது முசலி பிரதேசச் செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் சென்று மக்களின் பிரச்சினைகளை கேட்டறிந்து உதவிகளை செய்தனர்.
ஆனால், எமது மீள்குடியேற்றம் முசலி பிரதேச செயலாளர் உள்ளிட்ட அரச திணைக்களங்களில் கடமையாற்றுகின்ற உயர்மட்ட அதிகாரிகளுக்கு கண்ணுக்குத் தெரியவில்லையா? என அம்மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
எனவே, எவ்வித அடிப்படை வசதிகளும் அற்ற நிலையில் 200 இற்கும் மேற்பட்ட குடும்பங்கள் காடுகளுக்குள் வாழ்ந்து வருகின்றன.
தமது நிலைமையை கருத்தில் கொண்டு தமக்கு அத்தியாவசியத் தேவைகளை பெற்றுத்தருமாறு அந்த மக்கள் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Thanks to Voice of Mannar